இன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை : முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் இன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பு இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கொரோனா சிசிச்சை மையத்தை முதலமைச்சர் பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ரூ.127 கோடி செலவில், 750 படுக்கைகள் மற்றும் பிரத்யேக வசதிகளுடன் இந்த சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 நடமாடும் எக்ஸ்-ரே கருவிகளும், 40 உயர் ஓட்ட ஆக்சிஸன் கருவிகளும், 28 வெண்டிலேட்டர்களும் உள்ளன. அத்துடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் வசதிகளுடன் 80 மருத்துவர்கள் மற்றும் 100 செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 300 படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவுக்கு 60 படுக்கை வசதிகள் உள்ளன. தேசிய முதியோர் நல மையத்தில் 500 படுக்கைகள், அருகில் உள்ள விடுதிகளில் 250 படுக்கைகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின்போது முதலமைச்சர் பழனிசாமி, அரசின் நிதிநிலைக்கு ஏற்ப மக்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருவதாக கூறினார். தமிழகத்தில் இன்னொரு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பில்லை என்றார். கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டிய, அதேவேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க வேண்டும் என தெரிவித்தார். பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்ற முதலமைச்சர், முழு முடக்கத்தின் பலனாக கொரோனா குறைந்து வருவதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என கூறினார்.