கோவையில் அண்ணா சிலை இருந்த இடத்தில் திடீரென கூடுதலாக நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் அண்ணா சிலை இருந்த இடத்தின் அருகே, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு புதிதாக சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு தமிழகத்தில் நிறுவப்படும் முதல் சிலை இது எனக் கூறப்படுகிறது. கோவையில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக, பல நாட்களாகவே அரசு சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. வ.உ.சி மைதானத்தின் அருகே இருக்கும் அண்ணா சிலை பராமரிப்பு பணிகளும் நடைபெற்று வந்தன. அதற்காக அண்ணா சிலை இருந்த பகுதியின் நாட்புறமும் தரத்தால் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை தகரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. ஆனால் அங்கு அண்ணா சிலை அருகே கூடுதலாக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகள் நிறுவப்பட்டிருப்பதை, பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அண்ணா சிலை இருக்கும் இடம் கட்சிக்காக ஒதுக்கப்பட்ட இடம் என்றும், அதில் கூடுதலாக எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினர் நிறுவியுள்ளதாகவும் கூறினார். கட்சிகாக மாநகராட்சி ஏற்கனவே ஒதுக்கிய இடத்தில்தான் கூடுதலாக சிலைகள் நிறுவப்பட்டுள்ளது எனவும், சிலைகளை நிறுவியதில் எந்தவித விதிமீறலும் இல்லை என்றும் தெரிவித்தார்.