வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்ய உத்தரவு
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலின்போது, பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் வேட்புமனு தாக்கலுக்கு வேட்பாளர்கள் 3 வாகனங்களில் மட்டுமே வர வேண்டும் என்றும், வாகனங்களை தேர்தல் அலுவலக அறை அமைந்திருக்கும் பகுதியிலிருந்து, 100 மீட்டர் தொலைவுக்கு முன்பே நிறுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன், 4 பேரை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்யும் அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் தொடர்பான நிகழ்வுகளை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், ஏதேனும் விதிமீறல் நிகழ்ந்தால் உடனே மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுத்தாக்கலின்போது பத்திரிகையாளர்களை அனுமதிக்கலாம் என்றும், சூழ்நிலைக்கு தகுந்தவாறு எத்தனை பத்திரிகையாளர்களை அனுமதிப்பது எனத் தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.