ஐஜேகே வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஐஜேகே வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ஐஜேகே வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Published on

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தங்களுக்கு பொது சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐ.ஜே.கே.வின் தலைவர் ரவி பச்சமுத்து தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2010 ஆம் ஆண்டு நிறுவன தலைவர் பாரிவேந்தரால் தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி, அதே ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது, இயற்கை சீற்றங்களின் போது அவர்களுக்கு ஆதரவளிப்பது போன்ற பணிகளை செய்வதுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல்களில் களம்கண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் மோதிரம் சின்னமும்ம், 2016 சட்டமன்ற தேர்தலில் கத்தரிக்கோல் ஆகியவை பொது சின்னமாக ஒதுக்கப்பட்டதால், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களில் கட்சியின் வேட்பாளர்களை வாக்காளர்கள் எளிதில் அடையாளம் கண்டு வாக்களிக்க எளிதாக இருந்ததையும், அதன் மூலம் கணிசமான வாக்குகள் பெற்றதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 20 தொகுதிகளிலும் ஐ.ஜே.கே. போட்டியிடுவதாகவும், அதனால் கடந்த தேர்தல்களைபோல இந்த முறையும் பொது சின்னமாக ஒதுக்க வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அளித்த மனுவில், ஏழு கதிர்கள் கொண்ட பேனா முள் சின்னத்தை தங்களுக்கான பொது சின்னமாக ஒதுக்கக்கோரி மனு கொடுத்துள்ளதாகவும், ஆனால் தங்கள் மனுவை கருத்தில் கொள்ளாமல் வேறொரு கட்சிக்கு ஒதுக்கியிருப்பதாக தெரியவந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்க உள்ளதால் அதற்குள் ஒதுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பின்னர் அதே சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டுமெனவும், தேர்தல் ஆணையத்தால் இயலாதபட்சத்தில் வேறொரு பொது சின்னத்தை ஒதுக்க வேண்டுமென மார்ச் 2ல் மீண்டும் மனு கொடுத்துள்ளதாகவும் ஐ.ஜே.கே. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐ.ஜே.கே தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கட்சியை சேர்ந்த வழக்கறிஞரான டாக்டர் வி.வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் முறையீடு செய்தார். அவரது முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று மதியம் ஐ.ஜே.ஜே. வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com