மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் திமுக அங்கம் வகிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்னர் பதில் அளிக்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதன் சூட்சமம் என்ன என்று நமது அம்மா நாளிதழ் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவின் நமது அம்மா நாளிதழில் வெளியாகி இருக்கும் கட்டுரையில், மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க திமுக தயாராக இருக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அதில் அங்கம் வகிக்க மாட்டோம், நாங்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தான் அங்கம் வகிப்போம் என்று தானே ஸ்டாலின் பதில் அளித்திருத்த வேண்டும். ஆனால் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு அதற்குரிய விளக்கத்தை அளிக்கிறேன் என ஸ்டாலின் கூறி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் சூட்சமம் என்ன என்று நமது அம்மா நாளிதழ் வினவியுள்ளது. ஏற்கெனவே பாஜகவுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதையும் அதற்கு ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினையும் கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்தியில் பதவியை பிடிப்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருக்கிறாரே தவிர கொள்கை கோட்பாடுகளை கடைபிடிக்க அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என நமது அம்மா விமர்சித்துள்ளது. அங்கம் வகிப்பீர்களா என்று கேட்டால் காங்கிரஸ் கூட்டணியில் தான் அங்கம் வகிப்பேன் மற்ற கூட்டணியில் அங்கம் வகிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு ஏன் தயக்கம் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.