கொரோனா குறித்த பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அரசு மருத்துவரிடமிருந்து விளக்கம் பெறும் வகையில் ஃபேஸ்புக்கில் நேரலை செய்த நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
பொதுமக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருந்து வருகிறது. இது தொடர்பாக அரசு மருத்துவரிடமிருந்து உரிய விளக்கம் பெறும் வகையில் ஃபேஸ்புக் நேரலை நிகழ்வுக்கு நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. நேரலையில் பொதுமக்களின் கேள்விக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பிரின்ஸ் பயஸ் பதிலளித்தார்.
இதையடுத்து, நாகர்கோவில் மாநகராட்சியின் இத்தகைய சிறப்பான முயற்சிகளுக்கு பாராட்டுகள் தெரிவிப்பதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, சிவில் சர்வீசஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற நாகர்கோவிலை சேர்ந்த இன்ஜினியரிடம் கலந்துரையாடி அதனை வீடியோவாக தயார் செய்து, சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாநகராட்சி ஃபேஸ்புக் பக்கத்தில் ஆணையர் ஆஷா அஜித் வெளியிட்டது பலரது பாராட்டை பெற்றது.