பாபநாசம் திரைப்பட பாணியில் காரோடு மூழ்கடித்து கொலை: 45 நாட்களுக்கு பிறகு மீட்பு

பாபநாசம் திரைப்பட பாணியில் காரோடு மூழ்கடித்து கொலை: 45 நாட்களுக்கு பிறகு மீட்பு
பாபநாசம் திரைப்பட பாணியில் காரோடு மூழ்கடித்து கொலை: 45 நாட்களுக்கு பிறகு மீட்பு

தூத்துக்குடியில் மாயமான சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருவர், 45 நாட்களுக்கு பிறகு நெல்லையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். காரோடு கல்குவாரியில் மூழ்கடித்து அவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் சாப்ட்வேர் எஞ்சினியராக இருந்தவர். அமெரிக்க குடியுரிமை பெற்ற என்ஆர்ஐ -ஆன முத்துகிருஷ்ணன், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வழக்கு தொடர்பாக நெல்லையில் உள்ள வழக்கறிஞர் ஒருவரை சந்தித்துவிட்டு வருவதாக காரில் சென்றவர் காணாமல் போனார். இது தொடர்பாக தாய் அளித்த புகாரில் முத்துகிருஷ்ணனை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த நிலையில் முத்துகிருஷ்ணனின் ஏடிஎம் கார்டை மர்ம நபர்கள் பயன்படுத்தியது தெரியவந்ததை அடுத்து நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கார் டிரைவர் சிக்கினார். போலீசார் நடத்திய விசாரணையில் கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துகிருஷ்ணனை கொன்று தாழையூத்து கல்குவாரியில் காரோடு மூழ்கடித்ததை ‌ஒப்புக்கொண்டார். இதையடுத்து 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், கல்குவாரிக்குள் தேடியபோது கார் கண்டெடுக்கப்பட்டது.

மூழ்கிக் கிடந்த காரில் இருந்த முத்துகிருஷ்ணனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவரின் மனைவியுடன் தவறான தொடர்பு கொண்டிருந்ததால் முத்துகிருஷ்ணன் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் காவல்துறையினர் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com