"எங்களுக்கென்று சொந்த வீடு கூட இல்லை; ஐபிஎல் சம்பளத்தில்தான்.." - மும்பை வீரர் திலக் வர்மா

"எங்களுக்கென்று சொந்த வீடு கூட இல்லை; ஐபிஎல் சம்பளத்தில்தான்.." - மும்பை வீரர் திலக் வர்மா
"எங்களுக்கென்று சொந்த வீடு கூட இல்லை; ஐபிஎல் சம்பளத்தில்தான்.." - மும்பை வீரர் திலக் வர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடத் துவங்கி இருக்கும் இளம் வீரர் திலக் வர்மா “தன்னிடம் இன்னும் சொந்த வீடு இல்லை. எனது ஐபிஎல் சம்பளத்தில் பெற்றோருக்கு வீடு வாங்கித் தர வேண்டும்” என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ரா முதல் ஹர்திக் பாண்டியா வரை ஒவ்வோரு ஆண்டும் ஒரு நட்சத்திர வீரரை அடையாளம் காண்பதை வழக்கமாக வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்துள்ளார் 19 வயதேயான இளம் வீரர் திலக் வர்மா. இந்த ஐபிஎல் சீசனில் தனக்கென ஒரு பெயரை உருவாக்க திலக் வர்மா எடுத்ததெல்லாம் இரண்டு இன்னிங்ஸ்கள் மட்டுமே. மும்பை இந்தியன்ஸ் திலக் வர்மாவை ஏலத்தில் 1.7 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மும்பை இந்தியன்ஸ் தனது முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தாலும், திலக் 22 மற்றும் 61 ரன்கள் சேர்த்து அனைவரையும் கவர்ந்தார். முக்கியமான அம்சம் அவரது ஒருங்கிணைந்த ஸ்ட்ரைக் ரேட் 173!

இன்று புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ள திலக் வர்மாவின் பயணம் எந்த வகையிலும் எளிதானது அல்ல. ஹைதராபாத்தைச் சேர்ந்த, 19 வயதான அவர் ஒரு ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்தவர் மற்றும் ஜூனியர் அளவிலான கிரிக்கெட்டில் வியக்கத்தக்க செயல்திறனுடன் முதலிடத்திற்கு உயர்ந்தார். 2020 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் ஒரு பகுதியாக இருந்தபோதும் அவர் சிறப்பாக ஆடவில்லை. ஆயினும் உள்நாட்டு சுற்றுகளில் அவரது விளையாட்டை பார்த்து மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்தது.

“வளர்ந்தபோது, நிறைய நிதிச் சிக்கல்கள் இருந்தன. எனது தந்தை தனது சொற்ப சம்பளத்தில் எனது கிரிக்கெட் செலவையும், எனது மூத்த சகோதரரின் படிப்பையும் கவனித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளில், சில ஸ்பான்சர்ஷிப் மற்றும் போட்டிக் கட்டணங்கள் மூலம், எனது கிரிக்கெட் செலவுகளை என்னால் கவனித்துக் கொள்ள முடிந்தது. எங்களுக்கு இன்னும் சொந்த வீடு இல்லை. எனவே இந்த ஐபிஎல்லில் நான் சம்பாதித்ததைக் கொண்டு, எனது பெற்றோருக்கு வீடு வாங்கித் தருவதே எனது ஒரே நோக்கம்.

இந்த ஐபிஎல் பணம் எனது வாழ்நாள் முழுவதும் சுதந்திரமாக விளையாட ஆடம்பரத்தை அளிக்கிறது. ஐபிஎல்லில் 1.7 கோடிக்கு மும்பை அணி எடுத்ததாக கூறியபோது என் அம்மா அழுது தீர்த்தார். அவரால் பேச முடியவில்லை. வாழ்க்கையின் முக்கியமான தருணம் அது” என்று திலக் வர்மா பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com