சபாநாயகருடன் எம்எல்ஏ வெற்றிவேல் திடீர் சந்திப்பு
டிடிவி தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல், சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுக் கொள்வதாக, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர், கடந்த மாதம் 22 ஆம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து கடிதம் அளித்தனர். அதன் தொடர்ச்சியாக, அவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்யும்படி, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, ஆகஸ்ட் 24 ஆம் தேதி 19 எம்எல்ஏக்களிடமும் விளக்கம் கேட்டு, சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.
அனைவரும் தனித்தனியே, 7 ஆம் தேதி நேரில் ஆஜராக சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில், ஜக்கையன் மட்டும் சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளித்தார். இதனையடுத்து, வரும் 14 ஆம் தேதி அதாவது நாளை, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சபாநாயகர் தனபால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், சபாநாயகர் தனபாலை வெற்றிவேல் சந்தித்திருப்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.