’ஸ்டாலினை கடவுள் தண்டிப்பார்’ என முதல்வர் கூறிய நிலையில் அவருருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில்கொடுத்துள்ளார்.
நேற்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘’வேண்டும் என்றே திட்டமிட்டு அதிமுக அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். திமுகவின் குடும்ப அரசியல் ஒழியக்கூடிய தேர்தல் இந்த தேர்தல். இந்த தேர்தலோடு திமுக குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் வரலாம், கருணாநிதி குடும்பம் மட்டும்தான் வரவேண்டும் என்பதில்லை. அதனால் வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களித்து திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று பேசினார்.
இன்று சிவகங்கை மாவட்ட தொகுதிகளில் மக்களிடம் ஆதரவுகோரி பரப்புரையில் ஈடுபட்டுவரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், முதல்வரின் விமர்சனத்திற்கு பதில் கொடுத்துள்ளார். அதில், ‘’ஓபிஎஸ் மகனை நினைத்து வாரிசு அரசியல் என முதல்வர் பழனிசாமி பேசிவருகிறார். முதல்வர் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிவருகிறார்; போய் மூட்டைகளை அவிழ்த்துவிடுகிறார். பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்து பாவம் செய்த முதல்வரைத்தான் கடவுள் தண்டிப்பார்’’ என்று கூறினார்.