முதல்வருடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி திடீர் சந்திப்பு
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் திடீரென சந்தித்தார்.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெற்று வந்த வண்ணம் இருக்கின்றன. அதன்படி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என கே.பி.முனுசாமி தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று நடந்த செயற்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் கூட்டத்திலும் மருத்துவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டார். ஆனால் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்து கொள்ளவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட நிர்வாகிகளும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.
இந்நிலையில், சென்னை கிரீன்வேல்ஸ் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமைச்சர் வேலுமணி திடீரென சந்தித்துள்ளார். குறிப்பாக இந்த சந்திப்பு கட்சி தொடர்பான சந்திப்பாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.