ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து இந்தச் சிலையை திறந்து வைத்தனர். 7 அடி உயரம் கொண்டதாக இந்த சிலை அமைந்துள்ளது. ஜெயலலிதாவின் வெண்கல சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் பழனிசாமி தங்க மோதிரம் ஒன்றையும் பரிசளித்தார்.
இதனிடையே திறக்கப்பட்ட சிலை ஜெயலலிதாவின் உருவம்போன்று இல்லை என பல்வேறு தரப்பினரும் சமூகவலைத்தளங்களில் கருத்துக் கூறினர். ஜெயலலிதாவின் சிலையை முன்னாள் அமைச்சர் வளர்மதி, நடிகை வடிவுக்கரசி, சசிகலா ஆகியோருடனும் ஒப்பிட்டு பதிவு போட்டனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு மதிப்பளித்து இந்த முடிவு எடுக்கப்படுவதாகக் கூறினார்.