மர்மமாக இறந்த திருமணமான பெண் : அவசரமாக இடுகாட்டில் எரித்த கணவர் வீட்டார்..!
புதுக்கோட்டையில் மர்மமாக இறந்த தங்கள் மகளின் உடலை, அவரது கணவர் வீட்டார் அவசரமாக இடுகாட்டில் எரித்துவிட்டதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கண்ணணி பட்டியைச் சேர்ந்தவர் காடப்பன். இவரது மகள் உமா மகேஸ்வரி என்பவருக்கும், கோனாபட்டுவைச் சேர்ந்த சிவா என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த ஒரு வருடங்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை சிவாவின் பெற்றோர்கள் உமா மகேஸ்வரி இறந்துவிட்டதாக அவரது பெற்றோரை கைபேசியில் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.
மகள் இறந்து விட்டதாக தகவல் வந்தவுடன் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக கோனாபட்டு கிராமத்தில் உள்ள சிவாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். மகளின் தலையில் காயம் இருந்ததால் உறவினர்கள் வந்த பின்னர் இறுதிச்சடங்கு குறித்து முடிவு செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் சிவா மற்றும் அவரது பெற்றோர் உமாமகேஸ்வரி உடலை வீட்டின் வெளியே வைப்பதாக கூறி, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக எடுத்துச் சென்று இடுகாட்டில் எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உமாமகேஸ்வரி பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருமயம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.