பனாஜி தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றார்.
கோவாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளுடன் பா.ஜ.க., ஆட்சி அமைத்தது. மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவா முதலமைச்சராக பதவியேற்றார்.
சட்டமன்ற உறுப்பினராக அவர் 6 மாதத்துக்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால் பனாஜி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கும், வால்பொய் தொகுதிக்கும் 23ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. பனாஜி தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் மனோகர் பாரிக்கரும், வால்பொய் நகரில் விஸ்வஜித் ரானேவும் களமிறக்கப்பட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
பனாஜி தொகுதியில் மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் 4500க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வால்பொய் நகரிலும் பாரதீய ஜனதாவே வெற்றி பெற்றுள்ளது.

