பாஜகவின் தவறான கொள்கையை எதிர்க்க இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ்-க்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றரை ஆண்டு ஆட்சியின் தோல்விகளை பட்டியலிட்டு பேசினார். இந்தியாவின் விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும், வர்த்தகர்களுக்கும் கடுமையான கஷ்டங்களை பணமதிப்பிழப்பு நடவடிக்கை அளித்தது. இந்த நடவடிக்கை வரலாற்று பிழையாகும். மோடி தலைமையிலான மூன்றரை ஆண்டு ஆட்சியின் தோல்விக்கு இதுவே சான்று என்று கூறினார்.
மத்திய அரசு மக்களுக்கு தொடர்ந்து கஷ்டங்களை அளித்து வருவதாக கூறிய மன்மோகன் சிங், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஜிஎஸ்டியைஅமல்படுத்தி மக்களுக்கு மேலும் சுமையை அதிகரித்தது. ஜி.எஸ்.டி என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டமாகும். ஆனால் அதை காங்கிரஸ் செயல்படுத்தியிருந்தால் சரியான பராமரிப்பு மற்றும் போதுமான தயாரிப்புக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டிருக்கும் என்றார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக ஒன்றாக போராடுவதற்காக தேசிய அளவில் இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ்-க்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மன்மோகன் சிங் கோரிக்கை விடுத்தார்.