3 மணி நேரம் கழித்து வந்த ஆம்புலன்ஸ்: உயிருக்கு போராடியவர் உயிரிழந்த சோகம்
சென்னையில் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாடி தெற்கு மாடவீதி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(65). தள்ளுவண்டி கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரத்திற்கு செல்லாத நிலையில் இரவு 8 மணியளவில் இரவு உணவை தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவர் திடீர் நெஞ்சுவலியால் துடித்து ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தாரும், அக்கம்பக்கத்தினரும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட முறை அந்த பகுதிவாசிகள் தொடர்பு கொண்டும் ஆம்புலன்ஸ் வரவில்லை. அதேபோல அம்பத்தூர் மண்டல சுகாதார துறை அதிகாரிகள் தொடர்பு கொண்ட போதும் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
2 மணி நேரத்திற்கு மேலாகியும் ஆம்புலன்ஸ் வராததால் ஆத்திரமடைந்த அந்த பகுதிவாசிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 3 மணி நேரத்திற்கு பிறகு அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரகாஷை சோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் ஆம்புலன்ஸை முற்றுகையிட முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல்துறையினர் அப்பகுதி மக்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.
கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தும் நிலையில் இது போன்ற அவசர சிகிச்சைக்காக அழைத்தால் ஆம்புலன்ஸ் வர மறுப்புதாக குற்றசாட்டு வைக்கும் பொதுமக்கள் அரசு கவனம் செலுத்தி மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.