அழுகிய நிலையில் ஆண் சடலம்... மதுபோதையில் நாக்கு வறண்டு இறந்து போனாரா? போலீஸ் விசாரணை...
சென்னை மடிப்பாக்கத்தில் அழுகிய நிலையில், சுமார் 45-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுப்பு. உடலை கைப்பற்றி மடிப்பாக்கம் போலீசார் விசாரணை.
சென்னை மடிப்பாக்கம், கூட்ரோடு பகுதியில் லட்சுமி என்பவருக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடம் உள்ளது. இதில் அழுகிய நிலையில் 45-வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் இருப்பதாக மடிப்பாக்கம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான போலீசார் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அழுகிய நிலையில் இருந்த சடலத்தின் அருகில் காலி மதுபாட்டில்கள் மற்றும் சீட்டுக் கட்டுகள் கிடந்தன. யாரேனும் கொலை செய்தனரா? அல்லது அதிகளவு மதுபோதையில் நாக்கு வறண்டு இறந்து போனாரா? என பல கோணத்தில் மடிப்பாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பாழடைந்த கட்டிடத்தில் மர்ம நபர்கள் அடிக்கடி மது அருந்துவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவரின் சட்டை பையில் மொபைல் எண் இருந்ததால் அந்த மொபைல் எண் மூலம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.