ரிமோட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ரோபோட் : மதுரை இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு..!

ரிமோட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ரோபோட் : மதுரை இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு..!
ரிமோட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ரோபோட் : மதுரை இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு..!

20 அடி தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் ரோபோட்டை மதுரை பொறியியல் பட்டதாரி இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

சென்னையை தொடர்ந்து மதுரையில் நாளுக்கு நாள் கொரானா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையின் நூறு வார்டுகளிலும் கொரோனா பாதித்த நபர்கள் 3000க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுகாதாரத்துறை என அனைத்து துறையினரும் நோய் தடுப்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். இதனால் மதுரையில் லாரிகள் மூலம் நகரின் பல பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு, தூய்மைப்பணியாளர்கள் மூலம் பிளிச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் தொடர்ச்சியாக தெளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் நோய் பாதிப்பு உள்ள வீடுகளில் தூய்மைப்பணியாளர்கள் 20 அடி தூரத்தில் இருந்து பாதுகாப்போடு கிருமி நாசினி தெளிப்பதற்கான ரோபோட் ஒன்றை மதுரை இளைஞர் கண்டுபிடித்துள்ளார். பொறியியல் பட்டதாரியான சுந்தரேஸ்வரன் (35) என்பவர் தான் இந்த கிருமிநாசினி தெளிக்கும் ரோபோட்டை உருவாக்கியவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொறியியல் படிப்போடு எம்பிஏவும் முடித்துள்ளார்.



மதுரையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், நோய் பாதிப்பு ஏற்பட்ட வார்டுகள் மற்றும் வீடுகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தகுந்த பாதுகாப்புகளோடு கிருமிநாசினி தெளித்தாலும் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனைக்கருத்தில் கொண்டு முன் களப்பணியாளர்களான தூய்மைப்பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் சிரமத்தை குறைக்கும் வகையில் இந்த கிருமி நாசினி தெளிக்கும் ரோபோவை உருவாக்கியதாக சுந்தரேசன் தெரிவித்துள்ளார். இந்த ரோபாட் ரிமோட் கன்ட்ரோல் மற்றும் மொபைல் செயலி மூலம் இயங்கும் வசதி கொண்டுள்ளது. 20 அடி தூரம் தள்ளி நின்று மொபைல் செயலியை பயன்படுத்தியும் இதனை எளிமையாக உபயோகப்படுத்தலாம். சாதாரணமாக வலது, இடது, மேலே மற்றும் கீழே என நான்கு புறங்களிலும் ரோபோவை நகர்த்தி கிருமிநாசினியை தெளிக்கலாம்.

மேலும் ஒன்பது கிலோ எடை கொண்ட இந்த கிருமி நாசினி தெளிக்கும் ரோபோவில், 4 லிட்டர் வரை கிருமிநாசினி கரைசலை பயன்படுத்தலாம். ரோபோவை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம் எனவும், இதில் கிருமி நாசினியை தெளிக்கும் வேகம், நகரும் திறன் போன்றவற்றை கட்டுப்படுத்தும் வசதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, அரசு அலுவலகம், மருத்துவமனை போன்ற இடங்களில் 6 அடி தூரம் வரை கிருமி நாசினி தெளிக்க முடிவதோடு, வெளிப்புறங்களில் 12 அடி தூரம் வரை வேகமாக கிருமிநாசினியை தெளிக்க முடியும்.

இந்த ரோபோவுக்கு இந்திய அரசின் மருத்துவ தயாரிப்பு உபகரணங்களை அங்கீகாரம் செய்யும் சிடிஎஸ்கோ அமைப்பு தரச்சான்றிதழ் வழங்கியுள்ளதோடு, ஐரோப்பியன் அமைப்பான சிஇ மார்க்-கும் அங்கீகரித்துள்ளதாக சுந்தரேசன் தெரிவித்துள்ளார். இந்த இயந்திரத்தின் விலை ரூ.67 ஆயிரம் என்றாலும், கொரோனா நேரத்தில் தேவைப்படுவோருக்கு குறைந்த செலவில் வழங்க உள்ளதாக சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com