தலித்கள் உள்ளிட்ட பிராமணர் அல்லாதோரை ஆலையங்களில் அர்ச்சகராக்கிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பான திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் 36 பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக கேரள அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முதன் முதலில் தமிழகத்தில்தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற முழக்கம் எழுந்தது. அதற்காக திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால் அது இன்றுவரை தமிழகத்தில் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த நிலையில், இந்த உத்தரவை பிறப்பித்த கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆலையங்களில் சமூக நீதியை முதன் முதலில் கொண்டு வந்தது திமுகதான். கேரள அரசின் இந்த சாதனையை திமுக கொண்டாடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.