லவ்லினாவின் ஒலிம்பிக் பதக்கம் அவரின் தாயை விரைவில் குணப்படுத்தும்: தந்தை டிக்கன் உருக்கம்
இந்திய குத்து சண்டை வீராங்கணை லவ்லினா, டோக்கியோ ஒலிம்பிக் காலிறுதி போட்டியில் சீன தைபேயின் நியென்-சின் செனை தோற்கடித்து இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார்.
இந்தியாவுக்கான வரலாற்றை உருவாக்கியதற்காக லவ்லினாவின் வெற்றியை அவரது தந்தை டிக்கென் போர்கோஹெய்ன் மட்டும் கொண்டாடவில்லை, முழு கிராமமும் அவரது வீட்டு வாசலில் வந்து கொண்டாடியது. அந்த கிராம மக்கள் லவ்லினாவின் பெயரை உச்சரித்து ஆரவாரம் செய்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதிக்குள் நுழையும் மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீரர் லவ்லினா போர்கோஹெய்ன் (69 கிலோ) ஆவார். ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் விஜேந்தர் சிங், 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் மேரி கோம் ஆகியோர் பதக்கம் வெற்றுள்ளனர்.
லவ்லினாவின் தாய் மாமோனி போர்ஹோயினுக்கு கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நேரத்தில் லவ்லினாதான் தாயை அருகில் இருந்து கவனித்துக்கொண்டார். அதன்பின் அவர் ஐரோப்பாவிற்கு 52 நாள் பயிற்சி பயணத்திற்காக ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற குழுவுடன் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். லவ்லினா கோவிட் -19 இல் இருந்து மீண்ட பிறகு, அவருக்காக அசாமில் தனியாக பயிற்சி முகாம் உருவாக்க அரசும், பல அமைப்புகளும் அவருக்கு உதவியது.
இது தொடர்பாக பேசிய லவ்லினாவின் தந்தை டிக்கென், "ஆண்குழந்தைகள் தான் பெற்றோரை சுமக்கிறார்கள் என்று மக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் மூன்று மகள்களின் தந்தை என்பதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் எந்த பையனுக்கும் குறைவானவர்கள் அல்ல. லவ்லினாவின் தாய்க்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டபோது, அவர் இரவு முழுவதும் விழித்திருப்பார்” என்று மிகவும் கவலைப்பட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "என் மனைவிக்கு இரண்டாவது வாழ்க்கை கிடைத்துள்ளது. இப்போது லவ்லினாவின் பதக்கம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக என் மனைவியை மீட்க உதவும். லவ்லினாவுக்காக நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்துக்கும் பயன் கிட்டியுள்ளது ”என்று டிக்கன் கூறினார். இவர் கிராமத்தில் ஒரு சிறிய தேயிலை தோட்டம் வைத்திருக்கிறார், அங்குள்ள கூட்டுறவு சங்கத்தில் கடன் வாங்கியே மகள்களை போட்டிக்கு தயார் செய்துள்ளார். இவரது மற்ற இரண்டு மகள்களும் குத்துசண்டை வீராங்கனைகளாக உள்ளனர்.