“15 லட்சம் தர முடியாது; ஆனால் 72 ஆயிரம் தர முடியும்” - ராகுல் பரப்புரை
15 லட்சம் என்னால் மக்களுக்கு கொடுக்க முடியாது எனவும் உங்களிடம் பொய் கூற வரவில்லை எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தேனியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரப்புரையில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ காங்கிரஸின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மோடி மக்களுக்கு தலா ரூ. 15 லட்சம் வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினார்.
15 லட்சம் என்னால் மக்களுக்கு கொடுக்க முடியாது. அப்படி கொடுத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர் கெட்டுப் போய்விடும். நாட்டின் பொருளாதாரம் கெட்டுவிடாமல் நாட்டில் உள்ள 20 சதவிகிதம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 72 ஆயிரம் கொடுக்க முடியும். ஏழைகளுக்கு உதவி செய்தால் நாட்டின் பொருளாதாரமும் உயரும்.
15 லட்சம் தருவேன் என நான் பொய் கூறினால் நாட்டை சீரழித்து விடுவேன். உலகத்தில் எங்கும் இல்லாத வரியை மக்கள் மீது விதித்து அவர்களை துயரத்தில் ஆக்கினார் மோடி. காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மாணவி அனிதா பற்றி குறிப்பிட்டு எழுதியுள்ளோம்.
நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்பதை தமிழக மக்களே முடிவு செய்து கொள்ளலாம். எங்களுக்கு எப்படி தேர்வு வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்கிறோம் என தமிழர்கள் கூறினர். தமிழகத்தின் மீது எதையும் திணிக்க முடியாது. தேர்தல் அறிக்கையில் தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் குரல் ஒலிக்கும். தேர்தல் அறிக்கையில் இருக்கும் புரட்சிகரமான அம்சம் நியாய் என்ற திட்டம்தான். உலகில் உள்ள எந்த நாட்டிலும் நியாய் போன்ற திட்டம் பற்றி சிந்திக்கவில்லை. கோடீஸ்வரர்களுக்கு பணம் தர மாட்டோம். மாறாக நாட்டில் உள்ள ஏழைகளுக்குதான் வழங்குவோம்” என ராகுல்காந்தி பேசினார்.