சின்னம் முக்கியமில்லை, வேட்பாளர்தான் முக்கியம்: டிடிவி தினகரன்
சின்னம் முக்கியமில்லை, வேட்பாளர்தான் முக்கியம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இரட்டை இலை சின்னம், கட்சி பெயர், கட்சி அலுவலகம் என அனைத்தும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் நேற்று தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வெளியான மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக தேர்தல் தேதி அறிவிப்பும் வெளியானது.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “சின்னம் முக்கியமில்லை. வேட்பாளர்தான் முக்கியம். இத்தனை நாள் போராடியது உரிமைக்காகத்தான். சின்னம் மட்டுமே இந்த காலத்தில் வெற்றியை நிர்ணயிக்காது. ஆர்.கே.நகர் தேர்தலில் சின்னம் ஒரு முக்கியமானதாக இருக்காது. நீதிமன்றத்தில் தடை வந்தால் அவர்களும் சுயேட்சை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும். வேட்பாளர் முக்கியத்துவம் பெறும் காலம் இது. இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிடுவது மட்டும்தான் வருத்தம் அளிக்கிறது.
பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போதுதான் எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் வேலை செய்வார்கள். சென்ற முறை தேர்தல் நிறுத்தியதற்கு காரணம் நான் ஜெயித்து விடுவேன் என்று நினைத்துதான். பணப்படுவாடா என்பது தேர்தல் ஆணையம் முன்னிறுத்திய காரணமே தவிர பணப்படுவாடா உண்மையில்லை.
சாதிக் அலி தீர்ப்பை மேற்கோள்காட்டுவது தவறு. எங்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பில் நிறைய தவறுகள் உள்ளது. எடப்பாடி-ஓ.பி.எஸ் அணியினர் ஏ பார்ம் பி பார்ம்-ல் யாரை வைத்து எந்த அடிப்படையில் கையெழுத்து போட போகிறார்கள் என்று தெரியவில்லை.
சட்ட விதிகளின் படி அதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பு மேம்போக்கானது. அவசர கதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆர்.கே நகர் தேர்தலின் வெற்றி இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப போவதற்கான ஆரம்பம். எடப்பாடி அணிக்கு இரட்டை இலை வரமல்ல. அது ஒரு சாபம் என்பதை விரைவில் அவர்களுக்கு உணர்த்துவோம். ஆர்.கே.நகர் இந்த இயக்கத்தின் கோட்டை. ஆர்.கே.நகர் மக்கள் சரியான தீர்ப்பை வழங்குவார்கள்” என்றார்.