கொடைக்கானலில் தொடர் விடுமுறை மற்றும் சீசன் காலங்களில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், தரிசாக உள்ள நஞ்சை நிலங்கள் செழிக்கவும் மாற்றுப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில், ஆண்டுதோறும் சீசன் காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், பெருமாள்மலை கிராமத்தில் இருந்து வெள்ளி நீர்வீழ்ச்சி வழியாக 12 கி.மீ தொலைவில் உள்ள நகரை அடைய வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் நின்று கடக்கும் நிலை உள்ளது.
சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த சூழலை ஆண்டு தோறும் அனுபவிக்கும் நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க கொடைக்கானல் நகரில் இருந்து வில்பட்டி வழியாக பாரதி அண்ணாநகர் கிராமத்திற்கு செல்லும் மண் சாலையை தார் சாலையாக மேம்படுத்தி, ஏற்கனவே உள்ள பாரதி அண்ணாநகர் பேத்துப்பாறை தார் சாலையுடன் இணைத்தால் சிறந்த மாற்றுப்பாதையாக அமையும்.
மேலும் இச்சாலை அமையும் பட்சத்தில் வாகன நெரிசல் குறைவதோடு, பேத்துப்பாறை பகுதியில் உள்ள நஞ்சைநில விவசாயிகளும் பலன் பெறுவர். இதை உதவி ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்று மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்ற உதவி ஆட்சியர் அந்த பகுதியில் இருக்கும் மண் சாலையை நேரில்ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.