இந்திய அரசியலில் மூன்றாம் அணிக்கு கிடைத்திருக்கும் ஆளும் வாய்ப்பு?
இந்திய அரசியல் வரலாற்றில் தொடர்ந்து தோற்றுப்போகும் அல்லது ராசியில்லாத அணியாக பார்க்கப்படுவது மூன்றாவது அணி. பலரும் இதை அமைக்க முயன்று பயனற்றுப் போனதுதான் மிச்சம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு அணிக்கு இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு , சற்று பிரகாசமாக அமைந்திருக்கிறது. ஆனால் அதனை கட்டமைப்பதுதான் மிகப்பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது.
கடந்த காலங்களில் காங்கிரசின் ‘பி டீம்’ அல்லது பாஜகவின் ‘பி டீம்’ அன்ற அடிப்படையிலேயே இந்த அணி பார்க்கப்பட்டது. இப்போது கூட காங்கிரஸ் , பாஜக தலைவர்களிடம் கேட்டால், மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்றும் அது எதிர்க்கட்சியின் அணி என்றும் பரஸ்பர குற்றம் சாட்டுவார்கள். ஆனால் மூன்றாவது அணி அரசியல் கட்சிகளோடு ஒட்டி உறவாடுவார்கள்.
மூன்றாம் அணி தோற்றது ஏன் ?
மூன்றாவது அணி என்பது பெரும்பாலும் மாநில கட்சிகளால் கட்டமைக்கப்படும் ஒன்று. இந்திய அளவில் பார்த்தால் இவர்களால் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கையை பெறுவதில் சிக்கல் உண்டு. இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும், இல்லையென்றால் பாஜக ஆட்சியில் இருக்கும். தனிப்பெரும் கட்சியாக இருவரில் ஒருவரே மாறுவதால், ஆட்சிப் பெரும்பான்மைக்கு உதவ மூன்றாம் அணி கட்சிகளுக்கு தூது விடுவார்கள். அரசில் இடம் என்ற கோரிக்கையோடு சில கட்சிகள் இணைவார்கள். இதனால் மூன்றாவது அணி உருவாகாமலே போனது.
தற்போது எப்படி மூன்றாம் அணி சாத்தியம் ?
தற்போது நடந்து வரும் தேர்தலில் பாஜக அல்லது காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடம் கிடைக்காது என்பதே பலரின் கணிப்பு. இந்தக் கணிப்பு உண்மையானால் , ஆட்சி அமைக்க மூன்றாம் அணியின் தயவு கண்டிப்பாக தேவை. மூன்றாம் அணி என்ற ஒன்று கட்டமைக்கப்பட்டால், அது ஒற்றுமையாக இருந்தால் ஏதோ ஒரு வகையில் பாஜக, காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமராக வாய்ப்புண்டு. ஆனால் ஒற்றுமை முக்கியம்.
மூன்றாவது அணியும் சந்திரசேகர் ராவும்
தற்போதைய அரசியல் சூழலில் மூன்றாம் அணியை கட்டமைக்க முயல்வதில் இருவர் முக்கியமானவர்கள். ஒருவர் மமதா , மற்றொருவர் சந்திரசேகர் ராவ். இவர்கள் இருவருக்கும் ஆதரவாக நிற்பவர் மாயாவதி. கர்நாடக முதல்வர் குமாரசாமி, கேரள முதல்வர் பினராயி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரோடு இருவரும் நல்ல நட்பு பாராட்டுவதோடு, தொடர்ந்து பேசி வருகின்றனர். இன்று பினராயி விஜயனை சந்திரசேகர் ராவ் சந்திக்கிறார். ஸ்டாலினை வரும் 13-ம் தேதி சந்திக்கிறார். முன்னதாக தென்னிந்திய அரசியல் தலைவர்களை மமதா தேர்தலுக்கு முன்பு சந்தித்தார்.ஒருவேளை பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மூன்றாம் அணி மூலம் ஆட்சியமைப்பதே இவர்களது எண்ணமாக இருக்கிறது.
மூன்றாவது அணியின் சிக்கல்
காங்கிரஸ் , பாஜக அல்லாத ஆட்சி அமைக்க வேண்டுமென்பது இவர்களது எண்ணமாக இருந்தாலும், ஏதோ ஒரு வகையில் சிலர் காங்கிரஸுக்கு எதிராகவும், சிலர் பாஜகவுக்கு எதிராகவும் மட்டும் இருப்பவர்கள். ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் உள்ளார். ஆனால் மமதாவுடன் இணக்கம். மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி. ஆனால் சந்திரசேகருடன், மமதாவுடன் இணக்கம். கம்யூனிஸ்டுகள் மமதாவுடன் எலியும் பூனையும். ஆனால் காங்கிரஸ் அரசில் ஒன்றாய் இருந்தவர்கள். சந்திரசேகர் ராவ் காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலையும், மமதா பாஜக எதிர்ப்பு மனநிலையும் கொண்டவர்கள். இந்நிலையில் இவர்கள் எல்லாம் பெரிய கட்சிகளை உதறிவிட்டு இணைவது சாத்தியமற்ற ஒன்று. ஆனால் இந்தத் தேர்தல் அதற்கான வாய்ப்புகளை கொடுக்க இருக்கிறது.