அன்று கையை கட்டிக் காலில் விழுந்தவர் ஓபிஎஸ்: கே.சி.பழனிசாமி பகீர்!

அன்று கையை கட்டிக் காலில் விழுந்தவர் ஓபிஎஸ்: கே.சி.பழனிசாமி பகீர்!

அன்று கையை கட்டிக் காலில் விழுந்தவர் ஓபிஎஸ்: கே.சி.பழனிசாமி பகீர்!
Published on

தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உரிய விளக்கமளிக்க வேண்டும் என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 கே.சி.பழனிசாமி அதிமுக கொள்கைகளுக்கும், குறிக்கோளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டதால் கட்சியில் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் உறுப்பினர்கள் யாரும் அவருடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய கே.சி.பழனிசாமி, “எந்த இடத்தில் நான் கட்சியின் கொள்கையையும், கோட்பாட்டையும் மீறினேன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். அதிமுகவின் பதவித் திருத்தங்களை தேர்தல் ஆணையம் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி என்னை நீக்க முடியும். நான் அந்த ஆதாரத்தை நாளை பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிடுவேன்.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வரும் போது, அதிமுக அதற்கு ஆதரவாக வாக்களித்தால் அது தமிழகத்திற்கு காவிரி நீரை பெற்றுத்தர சாதகமாக இருக்கும் என்றுதான் நான் விவாத நிகழ்ச்சியின் போது தெரிவித்தேன். ஜெயலலிதா காவிரியின் உரிமைக்காக உண்ணாவிரதம் இருந்து உரிமையை பெற்றெடுத்தவர். ஆனால் இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு வேண்டுமானால், மோடியிடம் பயம் இருக்கலாம். ஏனெனில் அவர் மீது பல கொள்ளை, ஊழல்கள் வழக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுபோல் எந்தப் பயமும் இல்லை. நான் எம்.ஜி.ஆரால் கட்சியில் சேர்க்கப்பட்டவன். ஜெயலலிதாவால் எம்பியாக ஆக்கப்பட்டவன்.

சசிகலாவை எதிர்த்து முதன்முதலில் நான்தான் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தேன். அன்று சசிகலாவிடம் கையை கட்டிக்கொண்டு காலில் விழுந்தவர் ஓ.பன்னீர்செல்வம். நான் தமிழகத்தின் நன்மைக்காக அதிமுக மத்திய அரசுக்கு எதிரான முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் கூறினேன். ஆனால் இவர்கள் மோடிக்கு பயந்து கொண்டு என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு அவர்கள் முறையான விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com