“எங்கள் எம்எல்ஏக்கள் இருவர் பாஜகவினரால் கடத்தப்பட்டுள்ளார்கள்” - குமாரசாமி புகார்
தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் இருவர் பாஜகவினரால் கடத்தப்பட்டுள்ளார்கள் என மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுக்கு மேலும் 8 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவை. அதனால், காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெறும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதனிடையே, தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களிடம் பாஜகவின் மூத்த தலைவர் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசியுள்ளதற்கான ஆதரமாக ஒரு ஆடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. ஆனால், அது போலியான வீடியோ என பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், மஜத எம்.எல்.ஏக்கள் இருவரை பாஜக கடத்தியுள்ளதாக குமாரசாமி புகார் தெரிவித்துள்ளார். இருப்பினும் அந்த எம்.எல்.ஏக்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.