\
குமாரசாமி அரசு தோல்வி - பட்டாசு வெடித்து பாஜக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம் 

குமாரசாமி அரசு தோல்வி - பட்டாசு வெடித்து பாஜக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம் 

குமாரசாமி அரசு தோல்வி - பட்டாசு வெடித்து பாஜக எம்எல்ஏக்கள் கொண்டாட்டம் 
Published on

கர்நாடகாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை நடத்தினர். 

கர்நாடகாவில், காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு கவிழ்ந்ததை அடுத்து, பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் நேற்றிரவு பெங்களூருவில் உள்ள ரமதா ஹோட்டலில் கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதித்ததாகத் தெரிகிறது.

அப்போது அந்த நட்சத்திர விடுதியின் வெளியே பாரதிய ஜனதா எம்எல்ஏ ரேணுகாச்சார்யா நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பட்டாசுகளும் வெடித்து கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோருவது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, கட்சியின் எம்எல்ஏக்கள் இன்று காலை மீண்டும் கூடி ஆலோசிக்கவிருப்பதாக தெரிவித்தார். 

இதனிடையே கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எடியூரப்பா எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடக நிகழ்வுகளுக்கு ஆதரவு நல்கியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக எடியூரப்பாதான் தேர்வு செய்யப்படவிருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்களில் செய்திகள் உலா வருகின்றன. இது தொடர்பாக டெல்லியில் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். முதலமைச்சர் பதவிக்கான பாரதிய ஜனதாவின் இயற்கையான தேர்வு எடியூரப்பாதான் என்றபோதிலும், கட்சி மேலிடம் தான் இதுபற்றி இறுதியான முடிவெடுக்கும் என்று பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com