காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி: சந்திர சேகர் ராவுக்கு குவியும் வரவேற்பு

காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி: சந்திர சேகர் ராவுக்கு குவியும் வரவேற்பு
காங்கிரஸ், பாஜக அல்லாத 3வது அணி: சந்திர சேகர் ராவுக்கு குவியும் வரவேற்பு

காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் விடுத்த அழைப்புக்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மூன்றாவது அணி குறித்து நேற்று பேசிய சந்திர சேகர் ராவ், “தேசிய அரசியலில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்டது. இந்த 70 ஆண்டுகளில் 64 வருடங்கள் காங்கிரஸ் அல்லது பாஜக ஆட்சியில் இருந்துள்ளது. 70 ஆண்டுகள் ஆகியும் மக்கள் பிரச்னையில் சிக்கி தவிக்கின்றனர். மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. அதனால், பாஜக, காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. அது மூன்றாவது முன்னணியாக இருக்கலாம்” என்று கூறினார். 

மேலும், “மூன்றாவது அணி கருத்தின் மூலம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான முரண்பாட்டை உறுதி செய்துள்ளது. பிரதமர் மோடிக்கு எதிராக எனக்கு எந்த கருத்தும் இல்லை. நான் அவரது சிறந்த நண்பன். ஆனால், பிரச்னை என்பது நாடு மிகவும் மெதுவாக வளர்ச்சி அடைகிறது. தரமான மாற்றங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை” என்றார். 2014ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சந்திர சேகர் ராவ் கருத்துக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லிமீன் இயக்கத் தலைவரும், ஐதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி ஆதரவு தெரிவித்துள்ளார். “2009ஆம் ஆண்டுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது. அதபோல், 2014ல் ஆட்சியை பிடித்த பாஜகவும் அதனை செய்யவில்லை. 2019 மக்களவை தேர்தலில் மூன்றாவது அணியின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் முக்கிய ஆளுமையாக அதில் திகழ்வார்” என்று ஓவைசி கூறினார்.

சந்திர சேகர் ராவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது, தானும் பாஜக காங்கிரஸ் அல்லாத அணி அமைக்கும் அமைக்கும் யோசனையில் தான் இருப்பதாக தெரிவித்தார். மேலும் தங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் மம்தா அப்போது கூறினார். 

அதேபோல், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை சேர்ந்தவருமான ஹேமந்த் சோரனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு எம்.பி.க்களும் மற்றும் மேலும் சில முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் சந்திர சேகர் ராவின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் பல முறை மூன்றாவது அணி என்ற முழக்கத்தை பலரும் முன் வைத்துள்ளனர். குறிப்பாக பொதுத் தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு முறையும் அதற்கு சில மாதங்களுக்கு முன்பாக இந்த முழக்கம் திடீரென எழும்பும். ஆனால், இதுவரை அது எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை. இந்த முறை சந்திர சேகர் ராவ் அதனை முதலில் எழுப்பியுள்ளார். பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இதில் மிகப்பெரிய மாநிலமான மேற்குவங்காளத்தில ஆட்சியில் உள்ள மம்தா பானர்ஜியின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு மேல் உள்ளதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com