வேட்புமனுவில் ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கையெழுத்திடுவதை எதிர்த்து வழக்கு - மார்ச் 28ல் தீர்ப்பு
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்புமனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். கையெழுத்திடுவதற்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை மனுகூட்டியே விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதிமுக வேட்புமனுவில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கே.சி.பழனிச்சாமி மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 26ஆம் தேதி கடைசி நாள் என்பதால் வழக்கை முன்னதாக விசாரிக்க கோரிக்கை வைத்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த டெல்லி உயர்நீதிமன்றம், மார்ச் 28ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது. மேலும் அன்றைய தினமே தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதேவேளையில் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். தரப்பில் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையையும் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் கோரிக்கை மனு அளித்து இருப்பதாக கே.சி.பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.