8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என கூறும் நீங்களா விவசாயி? - முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கேள்வி

8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என கூறும் நீங்களா விவசாயி? - முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கேள்வி
8 வழிச்சாலை அமைத்தே தீருவேன் என கூறும் நீங்களா விவசாயி? - முதல்வருக்கு பாலகிருஷ்ணன் கேள்வி

'தமிழ்நாட்டில் தாமரை மலராது, கருகிதான் போகும்' என்று பரப்புரையில் பேசினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, “எதிர்காலத்தில் தமிழகம் தரம் தாழ்ந்து விடக்கூடாது என்ற ஒரு காரணத்திற்காக தான் இந்த அணி உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டு தாய்மார்கள், இளைஞர்கள் இளம் பெண்கள் பேய் பார்த்தால் கூட நம் மக்களுக்கு கோபம் வராது. பயம் வராது. ஆனால் மோடியை பார்த்தால், அவரது படத்தைப் பார்த்தாலே அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அந்த அளவுக்கு தமிழ்நாட்டை இந்தியாவை நாசப்படுத்தும் ஒருவராக நம் பிரதமர் உள்ளார்.

இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அம்பானிக்கு அதானிக்கும் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒருவராக இருக்கிறார். நடைபெற இருக்கும் 5 மாநில தேர்தலில் எந்த ஒரு மாநிலத்திலும் பாஜக டெபாசிட் கூட வாங்காது என்ற நிலைமைதான் உள்ளது. பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையை பார்த்தாலே பாஜகவிற்கு ஓட்டு போடக்கூடாது என்ற எண்ணம் அனைவருக்கும் வந்துவிடும். உலகத்திலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக விற்கிறது. சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற பழமொழிக்கு ஏற்ப பெட்ரோல் விலை 40 ரூபாய் அதன் மீது போடப்படும் வரி 53 ரூபாய். அம்பானி அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை கொழிக்க வைப்பதற்கு இவ்வாறு செய்கிறார்கள்.

எடப்பாடிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருந்தால் ஆலை முதலாளிகள் வைத்துள்ள பாக்கி 2500 கோடி ரூபாய் விவசாயிகளிடம் வாங்கிக் கொடுக்க முடியுமா.? எட்டு வழிச்சாலையினால் விவசாயிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தெரிந்து அதனை நிறுத்தி வைக்க சொன்ன உயர்நீதிமன்ற நீதிபதிக்கு இருக்கக்கூடிய நல்ல எண்ணம் கூட தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லையே. தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்று சாலை அமைக்க உள்ளோம் என்று கூறுகிறீர்கள். எட்டு வழிச்சாலை அமைத்தே தீருவேன் விவசாயிகளை அழித்தே தீருவேன் என கூறும் நீங்கள் பரம்பரை விவசாயியா?.

ஜெயலலிதா ரத்து செய்த கெயில் குழாய் பதிக்கும் திட்டத்தை மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா ஆட்சி எனக் கூறும் நீங்கள் அவர் ரத்து செய்த திட்டத்தை நீங்கள் எப்படி அனுமதிக்கிறீர்கள். தமிழக வரலாற்றிலேயே விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவிர வேறு யாருமில்லை. 234 தொகுதிகளிலும் இந்த அணி வெற்றி பெறும். பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை. மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும், அமித்ஷா தலைகீழாக நடந்தாலும் சரி, எடப்பாடி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் சரி தமிழ்நாட்டில் தாமரை மலராது கருகி தான் போகும்” என்று பேசினார் பாலகிருஷ்ணன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com