மவுன விரதத்தில் சசிகலா: விசாரணை ஆணையம் முன் ஆஜராக மாட்டார் எனத் தகவல்
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்து உத்தரவிட்டார். ஆணையத்தில் 120 பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளனர். 28 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். பிரமாண பத்திரங்கள் அடிப்படையில் நீதிபதி ஆறுமுகசாமி தொடர்ந்து தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
மேலும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கு கடந்த 27-ம் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. அனைவரும் 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சமீபத்தில் சந்தித்து, தான் பெற்ற வெற்றி குறித்து தெரிவித்தார். பின் சிறையிலிருந்து திரும்பிய டிடிவி தினகரன், சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாக கூறினார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிப்பார் என்றும் கூறப்படுகிறது. சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாலேயே விசாரணை ஆணையம் முன் ஆஜராகமாட்டார் என்றும் கூறப்படுகிறது.