ஜெயா தொலைக்காட்சியையும், நமது எம்.ஜி.ஆரையும் முடிந்தால் கையகபடுத்தி பாருங்கள்: நாஞ்சில் சம்பத்
முதலமைச்சர் அறிவித்த நான்கு தீர்மானங்களிலும் தீர்மானமாக எதையும் கூறவில்லை என தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமையகத்தில் நடந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலா, டிடிவி தினகரனை ஒதுக்குவது, நமது எம்ஜிஆர், ஜெயா டிவி மீட்பது உள்பட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம் சசிகலாவிற்கு மட்டுமே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயா தொலைக்காட்சியும், நமது எம்.ஜி.ஆரும் தனியாரின் சொத்துக்கள் என்றும் அதை கையகப்படுத்தும் அதிகாரத்தை முதலமைச்சருக்கு யார் கொடுத்தது எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தனியார் சொத்துக்களை கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு கிடையாது. ஜெயா தொலைக்காட்சியையும், நமது எம்.ஜி.ஆரையும் கையகப்படுத்தி பார்க்கட்டும் என கூறினார். அப்படி நடந்தால் விளைவுகள் மோசமாக நடக்கும் எனவும் அவர் தெரிவித்தார். தனியாருக்கு சொந்தமான சொத்துக்களை கையகப்படுத்துவது என்பது, ‘420’. ஆட்சியை கலைப்பது என்பது எங்கள் நோக்கமில்லை. ஒரு ’420’ தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பது அவமானம். எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்றும் அவர் கூறினார்.