காணாமல் போன 17 வயது மகள் - வாலிபருடன் மணக்கோலத்தில் வந்ததால் அதிர்ச்சியடைந்த தாய்!!
சுங்குவார்சத்திரம் அருகே 17 வயது சிறுமியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்த இளைஞர் போக்சோவில் கைது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் இந்திராணி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவனை இழந்து தனது 17 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்திராணியின் 17 வயது மகள் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். கோரோனா காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி அன்று சிறுமியை காணவில்லை என இந்திராணி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்த நிலையில் செங்காடு கிராமத்தில் மேட்டுக் காந்தூர் பகுதியைச் சேர்ந்த அசோக்ராஜ் என்ற இளைஞருடன் திருமண கோலத்தில் சிறுமியை மீட்டனர்.
இதனையடுத்து அசோக்ராஜை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்தி சென்று இரண்டாம் திருமணம் செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அசோக்ராஜ் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.