விண்வெளியில் இந்தியாவிற்கென தனியாக ஆய்வு மையம் 2030ஆம் ஆண்டுக்குள் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர் இது தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்தியாவிற்கு என்று தனியாக ஆய்வு மையம் அமைக்கும் திட்டம் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சிவன் தெரிவித்தார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 4 மாணவர்கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இளங்கலைப் மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்றன. இந்தத் தேர்வை 3 லட்சத்து 38 ஆயிரத்து 457 மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வெழுதிய மாணவர்களில் மொத்தம் 11,380 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7.352 மாணவர்களும், 4,027 மாணவிகளும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன் ஒரு மூன்றாம் பாலினத்தவர் தேர்வில் வென்று சாதித்துள்ளார்.
கர்நாடகத்தில் மழை பெய்து வரும் நிலையிலும் தமிழகத்திற்கான உரிய நீர் கிடைக்கவில்லை என்பதை ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தும் எனத் தெரிய வந்துள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் மீண்டும் வரும் 25ஆம் தேதி கூடுகிறது. இதில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடகா ஏன் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவில்லை என்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் 2003ஆம் ஆண்டுக்குப் பின்னர் மோதுகின்றன. கடந்த 2003ஆம் ஆண்டு கங்குலி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்துடன் களம் கண்டது. அப்போது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. அதன்பின்னர் நடந்த 2007, 2011 மற்றும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஒருமுறை கூட மோதிக்கொள்ளவில்லை.
ஏஎன்32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்திய விமானப் படையின் விமானம் ஏஎன்-32 ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.25 மணிக்கு அசாம் மாநிலம் ஜோர்கட்டிலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மேசூகா பகுதிக்கு புறப்பட்டது. இதனையடுத்து விமானம் மதியம் 1 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இந்த விமானத்தில் 13 பேர் பயணம் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் உள்ளிட்டவர்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஏஎன்-32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை இன்று தெரிவித்தது. இந்தச் சூழலில் ஏஎன்-32 விமான விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி தாமதம் குறித்து போட்டியின் நடுவர் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள போட்டியின் நடுவர், “மைதானம் ரெடியாகதான் உள்ளது. இருந்தாலும் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் குறைய நேரம் எடுக்கிறது. எங்களுக்கு வீரர்களின் பாதுகாப்பு முக்கியம். இது தொடரின் தொடக்க நிலைதான். அதனால் நாங்கள் அனைத்தையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. இன்று வெயிலையோ, சூரியனையோ பார்க்க முடியவில்லை. அதனால் களம் காய்ந்து போவதற்கு நேரம் ஆகிறது. அதற்காகதான் காத்துக்கொண்டிருக்கிறோம். ஈரத்துடனே விளையாட முடியாது, ஏனென்றால் இது சர்வதேச போட்டி. சில பகுதிகள் மட்டும்தான் மிகுந்த ஈரத்துடன் இருக்கிறது. எனவே போட்டியை 75 நிமிடங்கள் குறைக்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார். இந்நிலையில் போட்டி கைவிடப்பட்டுள்ளது.