உண்மையாக உழைத்தால் அதிமுகவில் உயரலாம்: எடப்பாடி பழனிசாமி
உண்மை, உழைப்பு, ஆளுமை கொண்ட யார் வேண்டுமானாலும் அதிமுகவில் உயர்ந்த நிலைக்கு வரலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யாராக இருந்தாலும், தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்பவர் ஜெயலலிதா என்று கூறினார். நாட்டிலேயே முதலீட்டை ஈர்ப்பதில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது என்று கூறிய முதலமைச்சர், மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதிமுக அரசு செயல்படுவதாகக் கூறினார்.
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அரசு பள்ளிகளில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு அறிவுபூர்வமான கல்வி வழங்கப்படுகிறது. 10 ஆண்டுகளில் தமிழகம் விஞ்ஞான உலகமாக மாறியிருக்கும். தொலைநோக்கு சிந்தனையோடு மாணவர்களுக்கு சிறந்த கல்வி வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிக அளவு உயர்ந்துள்ளது. அதிக நிதி ஒதுக்கப்பட்டதால் மாணவர்களின் கல்வித்திறன் உயர்ந்துள்ளது” என்றார்.

