'சென்ட்டிமென்ட்' பேச்சு, குடும்பத்துடன் அழுகை - அச்சச்சோ போட வைத்த அதிமுக வேட்பாளர்
திருமங்கலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்பத்துடன் கதறி அழுத வேட்பாளர். தோற்கும் பட்சத்தில் உயிரோடு இருக்க மாட்டேன் என்று உருக்கமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளராக நகரச் செயலாளர் விஜயன் போட்டியிடுகிறார். 17வது வார்டு வேட்பாளராக அவரது மனைவி உமா போட்டியிடுகிறார். இந்த நிலையில் திருமங்கலம் 1வது வார்டு செங்குளம் பகுதியில் விஜயன் மற்றும் அவரது மனைவி உமாவும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கட்சி என்னை கைவிட்டு விட்டது. இந்த மக்களை நம்பித்தான் நான் போட்டியிடுகிறேன். நான் தோற்கும் பட்சத்தில் உயிரோடு இருக்க மாட்டேன். அப்படி நான் இறந்து போனால் முதல் மாலையை இந்த ஊர்தான் எனக்கு அணிவிக்க வேண்டும் என்று கதறி அழுது கொண்டே கூறினார். இதைக்கண்ட அந்தப்பகுதி பெண்களும் கண்கலங்கினர்.
தான் கஷ்டத்தில் இருந்தபோது என்னை கட்சி கைவிட்டது. இப்போதும் தனிமரமாக தான் உள்ளேன். 27பேர் என்னை நம்பியே உள்ளனர். இந்த ஊருக்கு நான் துரோகம் செய்திருந்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறி தனது குடும்பத்துடன் வாக்கு சேகரித்தார்.