நான் இனிமேல் எந்த அரசியலிலும் இல்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத் அவரது சொந்த ஊரான மணக்காவிளையில் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “எனது மைத்துனரின் மூத்த புதல்வரும் அவரது மனைவியும் குரங்கணி காட்டுத்தீயில் உடல் கருகி உயிர் இறந்ததால், மேலூரில் நடந்த அமமுக (அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) அமைப்பின் அறிமுக விழாவுக்கு செல்ல முடியவில்லை. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் எனக்கு உடன்பாடில்லை. அண்ணா திராவிடம் என்பதை தவிர்த்துவிட்டு என்னால் பேசமுடியாது. அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்திவிட்டு கட்சி நடத்தாலம் என்று டிடிவி தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள். நான் இனிமேல் அதில் இல்லை. நான் இ்னி எந்த அரசியலிலும் இல்லை. நான் இதற்காக எதிர்வினை ஆற்றபோவதும் இல்லை. டிடிவி தினகரன் பச்சைப் படுகொலையை செய்திருக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.