கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் வந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை
கொரோனா டெஸ்டில் நெகட்டிவ் வந்தவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் குற்றச்சாட்டு. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட மருத்துவதுறை துணை இயக்குனர் தகவல்.
வேலூர் சைதாப்பேட்டை தேவராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாபு. வசந்தபுரத்தில் உள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பாபு பணிக்காக வசந்தபுரம் செல்லும் போது இரயில்வே கேட் அருகே போடப்பட்டிருந்த கொரோனா சிறப்பு முகாமை சேர்ந்த ஆட்கள் பாபுவை அழைத்து கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின்பு தங்களுக்கான ரிசல்ட் செல்போனில் குறிஞ்செய்தியாக வரும் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து 2 நாட்கள் கழித்து பாபுவின் சொல்போனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை (நெகட்டிவ்) என குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் கடந்த திங்கள் கிழமை பாபுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் 3 நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என கூறி 108 ஆம்புலென்ஸ் மூலம் வேலூர் அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இது குறித்து பாபு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் போது, நான் வேலைக்கு செல்லும் போது டெஸ்ட் எடுத்தார்கள் எனது செல்போனுக்கு நெகட்டிவ் என மெசேஜ் வந்தது. ஆனால் என்னை அன்று மாலையே 108 ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். மேலும் 3 நாட்களில் வீட்டிற்கு அனுப்பி விடுவோம் என கூறினார்கள். ஆனால் இன்றோடு 6 நாட்கள் ஆகப்போகிறது இதுவரை மருத்துவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. இதனாரல் தான் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் தன்னை வீட்டிற்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேலும் வேலூர் அரசு பென்ட்லெண்ட் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் போதிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை என்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் யாரும் முறையாக கவனிப்பது இல்லை என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இது குறித்து வேலூர் மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குனர் மதிவாணன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது. பாபு என்பவரை அழைத்து சென்றது குறித்து விசாரிக்கப்படும். மேலும் குறிஞ்செய்தி தவறாக வந்திருக்க வாய்ப்பிருக்கும். இருந்த போதும் இது குறித்து விசாரிக்கப்படும். அதேபோல் வேலூர் அரசினர் பென்ட்லெண்ட் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் உரிய மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் நோயாளிகளை முறையாக கவனிப்பது இல்லை என புகாரும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.