தேர்தல் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஒட்டு விண்ணப்பங்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் வாக்களிப்பதற்கான படிவம் முறையாக வழங்கப்படவில்லை என்றும், இதனால் ஒரு லட்சம் பேர், தபால் வாக்குகளை செலுத்தவில்லை எனவும் செய்தி வெளியாகியிருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளதாகவும், தபால் வாக்களிக்க முடியாமல் போன அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்க உத்தரவிடுமாறு, சென்னையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் சாந்தகுமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசுக்கு எதிராக ஆசியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாக்காளரின் வாக்கும் முக்கியமானது எனக் கூறிய நீதிபதிகள், தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு தபால் ஒட்டுக்களுக்காக எத்தனை விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டன, எத்தனை தபால் வாக்குகள் பதிவாகின என்பது போன்ற விவரங்களை நாளை மறுநாள் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.