குஜராத், இமாச்சல் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: தமிழிசை
பாஜக இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இரண்டு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. 182 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜக 103 இடங்களிலும், காங்கிரஸ் 77 இடங்களிலும், 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக 45 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் பாஜகவின் வெற்றியை தமிழக பாஜக அலுவலகத்தில் தமிழிசை செளந்தராஜன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “குஜராத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஆட்சியை பாஜக மீண்டும் தக்க வைத்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். அதேபோன்று இமாச்சலப் பிரதேசத்திலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பல எதிர்ப்பு விமர்சனங்களை தகர்த்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. ரூ.500, ரூ.1000 ஆயிரத்தை ஒழித்தவுடன் பாஜகவும் ஒழிந்துவிட்டது என எதிர்க்கட்சிகள் கூறினார்கள். ஆனால் அதற்கு பிறகு தான் பாஜக மேல் எழும்பியது. ஜி.எஸ்.டி வந்த பிறகு பாஜக ஒழிந்துவிடும் என்று கூறினார்கள். தற்போது பாஜக இரண்டு மடங்கு சக்தியுடன் மேல் எழும்பியுள்ளது. மோடியின் மாற்றங்களை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த மாற்றம் தமிழக அரசியலிலும் ஏற்படும். வட இந்தியா, குஜராத்தில் தொடரும் வெற்றி, தமிழகத்திலும் தொடரும். காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் காந்தி தலைவராகவே ஆகிய போதிலும் பாஜகவின் வெற்றியை யாரும் தடுக்க இயலாது. குஜராத்தில் காங்கிரஸ் ஜாதியினரை வைத்து மட்டுமே காங்கிரஸ் அரசியல் செய்தது. ஆனால் ஜாதி அரசியலை வைத்து வெற்றி பெற முடியாது என்பதை மக்கள் உணர்த்தியுள்ளனர்” என்று கூறினார்.