தமிழக அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் 2 கோடி அபராதம்? - டிடிவி தினகரன்
மக்களின் உயிரையும், உடைமைகளையும் காப்பதற்கான முழு முயற்சியையும் இந்த அரசு எடுக்கவேண்டும் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடையாறு, கூவம் ஆறு கரையோரத்திலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கான காலதாமதத்தை கண்டித்து தமிழக அரசிற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் 2கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் எவ்வளவு மெத்தனப்போக்காகவும் அலட்சியமாகவும் செயல்படுகிறது என்பதை இந்தத் தீர்ப்பு தோலுறித்துக் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன், தலைநகரான சென்னையிலேயே இவ்வளவு அஜாக்கிரதையாக செயல்படும் அமைச்சர்கள் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் நிலை என்ன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
எட்டுவழிச்சாலைக்காக விவசாயிகளிடம் விளைநிலங்களை கையகப்படுத்துவதில் அக்கறையும் வீரியமும் காட்டிய அரசு கால்வாய்களை சீரமைப்பதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதிலும் அக்கறை காட்டாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தற்போது வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ள புயலை எதிர்கொள்ள தயார் என வெறும் பேட்டி மட்டும் அளிக்காமல் முழு மூச்சாக செயல்பட்டு புயல் பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.