ஜனநாயகப் போராட்டங்களை காவல்துறையை வைத்து ஒடுக்குகிறது அரசு: மு.க.ஸ்டாலின் கண்டனம்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டதற்கு திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறையினைக் கொண்டு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் நடவடிக்கை வேதனையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட உடன் சட்டப்பேரவையில் இது குறித்து முதலமைச்சர் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்த அரசு விரும்பவில்லை எனக் கூறியுள்ள ஸ்டாலின் இத்தகைய அடக்குமுறைகளால் தற்போதைக்கு போராட்டத்தை ஒடுக்கலாமே ஒழிய அவர்களது உணர்வுகளை தடுத்துவிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அரசு ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.