தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக் கூடிய நடிகர் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக சிறுமி ஒருவர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டு வாயிலில் நின்று கேமிராவை பார்த்தபடி கதறி அழுத வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
விஜய்யை நேரில் பார்ப்பதற்காகவே காஞ்சிபுரத்திலிருந்து தனது பெற்றோருடன் வந்த அந்த சிறுமி, விஜய் வீட்டின் நுழைவு வாயிலில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்தபடி, “எப்படியாச்சு கூப்பிடுங்க. எனக்கு அழுகையா வருது. நீங்க கூப்பிடுவீங்கனு நம்பிக்கைல இருக்கேன். தேங்க்யூ. தளபதிய பாக்க காஞ்சிபுரத்துல இருந்து வந்திருக்கேன்.” என அந்த சிறுமி பேசியுள்ளார்.
இந்த வீடியோவை கண்ட இணையவாசிகள் பலரும் அந்த சிறுமியின் செயலுக்கு முகம் சுழித்து கருத்து பதிவிட்டிருக்கிறார்கள்.
அதில், சினிமா நட்சத்திரங்களை பார்க்க வேண்டும் என்ற மோகமும், ஆர்வமும் இருந்தாலும் இந்த அளவுக்கெல்லாம் மெனக்கெட்டு செயல்படுவது அத்தியாவசியமற்றது. திரையில் நடிக்கும் நட்சத்திரங்களே தத்தம் ரசிகர்களை நல்ல வழியில் செயல்பட வேண்டும் என்ற தொடர்ந்து அறிவுறுத்தி வரும் நிலையில் இப்படியெல்லாம் சுயவிளம்பரம் தேடுவதற்கான செயல்களில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல என்றெல்லாம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இதுபோக, இப்படியெல்லாம் ஒரு நட்சத்திரத்தின் வீட்டு வாயிலில் வந்து நின்று பார்த்தே ஆகவேண்டும் என அடம் பிடிப்பதன் மூலம் இவரை பார்த்த மற்ற சிலரும் வந்து நின்று கேட்கக் கூடும். இதனால் சமயங்களில் பொது அமைதிக்கு குந்தகமும் ஏற்படக் கூடும். இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க நடிகர்கள் தரப்பிலிருந்தும் காவல்துறை தரப்பிலும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிலர் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். அதேபோல், இதுபோன்ற செயல்களால் நடிகர்களின் பிரைவசி பாதிக்கப்படுவது என்பதும் இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
முன்னதாக சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரின் மகளான அபிதா பேகம், “விஜய் அங்கிள் என்னை பாக்க வரமாட்டீங்களா” எனக் கேட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து அது நடிகர் விஜய்க்கு தெரிய வந்திருக்கிறது.
இதனையடுத்து குழந்தை அபிதாவின் ஆசையை நிறைவேற்ற லியோ படத்தின் கெட்டப்பில் இருந்த நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் பேசி மகிழ்வித்திருந்தார். அந்த வீடியோவும் ஃபோட்டோவும் இணையத்தில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.