17 ஆவது மக்களவை தேர்தல் ! ஒரு முழு ரிப்போர்ட்
தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன்3ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 17வது மக்களவையின் பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த தேர்தல் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
நாடு முழுவதும் 543 மக்களைவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 10 லட்சம் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டு தேர்தலின் போது வாக்குப்பதிவு மையங்கள் 9 லட்சமாக இருந்தது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருக்கிறார்கள். தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இறுதியாக 7ம் கட்ட தேர்தல் மே 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்துக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.
ஆந்திர பிரதேசம், அருணாச்சல், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கு மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெறாது. பாதுகாப்பு காரணங்கள் கருதி தேர்தல் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் தேதிகள்
முதல் கட்ட தேர்தல் | ஏப்ரல் 11 | 20 மாநிலங்களில் 91 தொகுதிகள் |
2ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 18 | 13 மாநிலங்களில் 97 தொகுதிகள் |
3ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 23 | 14 மாநிலங்களில் 115 தொகுதிகள் |
4ம் கட்ட தேர்தல் | ஏப்ரல் 29 | 9 மாநிலங்களில் 71 தொகுதிகள் |
5ம் கட்ட தேர்தல் | மே 6 | 7 மாநிலங்களில் 51 தொகுதிகள் |
6ம் கட்ட தேர்தல் | மே 12 | 7 மாநிலங்களில் 59 தொகுதிகள் |
7ம் கட்ட தேர்தல் | மே 19 | 7 மாநிலங்களில் 59 தொகுதிகள் |
வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் - மக்களவைத் தேர்தல்
தமிழகத்திற்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் | மார்ச் 19 |
வேட்புமனு தாக்குதலுக்கு கடைசி நாள் | மார்ச் 26 |
வேட்புமனு மீதான பரிசீலனை | மார்ச் 27 |
மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் | மார்ச் 29 |
வாக்குப் பதிவு | ஏப்ரல் 18 |
வாக்கு எண்ணிக்கை | மே 23 |
தமிழகம் - இடைத்தேர்தல்:
தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடைபெறாது என்றும் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 18ம் தேதியே 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் என்ன?
திருப்பரங்குன்றம் : மருத்துவமனையில்சுயநினைவோடு இல்லாமல் இருந்த ஜெயலலிதாவிடம் கைரேகை பெறப்பட்டதாகவும், இரட்டை இலை சிலை சின்னத்தில் போட்டியிட்டு ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரியும் வழக்கு. பின்னர் ஏ.கே போஸ் இறந்துவிட்டதால் அங்கு இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது
ஒட்டப்பிடாரம் : அதிமுக வேட்பாளர் சுந்தர்ராஜ், அரசு ஒப்பந்ததாரர் என்பதை மறைத்தாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதிமுக சார்பில் வெற்றிபெற்ற சுந்தர்ராஜ் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி: அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில்பாலாஜியின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி சுயேட்சை வேட்பாளர் கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். செந்தில் பாலாஜி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரவக்குறிச்சி தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
தேர்தல் நடத்தை விதிமுறைகள் :
தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும். அதன்படி இந்தியாவில் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் Model code of conduct எனப்படும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
- வாக்கிற்கு பணம் கொடுப்பது.
- பரிசுப் பொருட்கள் மற்றும் சலுகை கூப்பன்கள் தருவது.
- வாக்காளர்களுக்கு மது வழங்குவது
- அனுமதியின்றி போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைப்பது
- ஆயுதங்களை காட்டி மிரட்டுவது
- அனுமதியின்றி அதிக வாகனங்களில் வருவது
- பொதுசொத்துக்களை சேதப்படுத்துவது
- ஊடக செய்திகளுக்கு பணம்
- வாக்காளர்களை வாக்குசாவடிகளுக்கு வாகனத்தில் அலைத்து செல்லுதல்
- பிரச்சாரம் தடைக்காலத்தில் பிரச்சாரம் செய்வது.
- மத சம்பந்தமான பேச்சுக்கள்
- அனுமதிக்கப்பட்ட நேரத்திற்மேல் ஸ்பீக்கர்கள் பயன்படுத்துதல்
- பொதுக் கூட்டத்திற்கு மக்களை வாகனத்தில் அழைத்து செல்லுதல்
- மத்திய மற்றும் மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் அரசுகள் அரசு வாகனங்கள் மற்றும் அரசு சொத்துகள் தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது.
- மத்திய மற்றும் மாநில அரசுகள் தேர்தலில் பயன்பெறும் வகையிலுள்ள எந்தவித திட்டங்களையும் அறிவிக்க கூடாது.
- மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் தங்களின் அரசு முறை வருகைகளை தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் சார்ந்த செயல்களுக்கு பயன்படுத்தக்கூடாது.
- மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசின் நிதிகளை தேர்தல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
புதிய நடைமுறைகள் விதிமுறைகள்:
- ஒப்புகைச்சீட்டுடன் கூடிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களே முழுமையாக பயன்படுத்தப்பட உள்ளன.
- ஒரே பெயருடைய வேட்பாளர்கள் குறித்த குழப்பத்தை தவிர்க்கும் வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களிலும், தபால் வாக்குச்சீட்டுகளிலும் கட்சியின் பெயர், வேட்பாளர்களின் பெயர், அவர்களுக்கான சின்னம் மட்டுமே இதுவரை இடம்பெற்றுவந்த நிலையில், இத்தேர்தலில் வேட்பாளர்களின் புகைப்படமும் கூடுதலாக இடம்பெற உள்ளது.
- வாக்காளர் அடையாள சீட்டு, வாக்களிக்கும் ஆவணமாக இம்முறை ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக பிரெய்லி முறையிலும் வாக்காளர் அடயாள சீட்டு வழங்கப்பட உள்ளது.
- தேர்தல் விதிமுறைகள் அடங்கிய பிரத்யேக கையேடுகளை, வீடுகள் தோறும் நேரில் சென்று வாக்காளர்களுக்கு வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது.
- குற்றவழக்குகள் இருப்பின், அவற்றினை வேட்புமனு படிவம் 26-ல் தவறாறு குறிப்பிடுதல் வேண்டும் என வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- வேட்பாளர்கள் தங்களின் குற்ற வழக்குகள் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் தேர்தலுக்குள் மூன்று முறை விளம்பரமாக வெளிப்படுத்த வேண்டும்
- அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சி வேட்பாளர்களின் குற்ற பின்னணிகள் குறித்து, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் 3 முறை விளம்பரம் செய்ய வேண்டும்
- தங்களின் அதிகாரப்பூர்வ கட்சி இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
- தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்பவர்கள், வெளிநாடுகளில் தங்களுக்கு உள்ள சொத்துக்கள் குறித்த விவரங்களையும், கடந்த 5 ஆண்டுகால வருமானவரிக் கணக்குகளையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்