பாஜக வேட்பாளரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் ஏற்றப்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களில் முதற்கட்ட தேர்தல், கடந்த மார்ச் மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இம்மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று (01.04.2021) நடைபெற்றது.
இந்தநிலையில், இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த சிலமணி நேரங்கள் கழித்து, அசாமை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், பதர்கண்டி தொகுதியின் பாஜக வேட்பாளர் கிருஷ்ணெந்து பால் என்பவரின் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் இருப்பதைப் போன்ற வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், பாஜக வேட்பாளர் காரில் வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக 4 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்சென்ற தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதானதால், லிஃப்ட் கேட்டு எடுத்துச் செல்லப்பட்டது என்றும் வாக்குப்பெட்டியை கொண்டு செல்ல லிஃப்ட் கேட்ட வாகனம் பாஜக வேட்பாளருக்கு சொந்தமானது என்பது தெரியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. மேலும் பதர்கண்டி தொகுதி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிக்கு எந்த சேதாரமும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.