வாக்குப்பதிவு எந்திரம் பழுது: கமல்ஹாசன், ஸ்ருதி காத்திருப்பு
வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவர் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜீத், விஜய் உட்பட நடிகர், நடிகைகளும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றார். வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார். அவருடன் தென் சென்னை வேட்பாளர் ரங்கராஜனும் காத்திருந்தார்.