“20 ஆயிரம் பேர்களுடன் அதிமுகவில் இணைகிறேன்” - இசச்கி சுப்பையா
டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து விலகுவதாக இசச்கி சுப்பையா அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் தென்சென்னை வேட்பாளராக களம் இறங்கியவர் இசச்கி சுப்பையா. இவர் தற்போது அமமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். டிடிவி தினகரன் அளித்த பேட்டியால் தனக்கு மனவருத்தம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ள இசக்சி சுப்பையா, சுயலாபம் பார்ப்பதாக இருந்தால் அமமுகவில் சேர்ந்தே இருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
ஜூலை 6-ஆம் தேதி முதலமைச்சர் முன்னிலையில் 20,000 பேருடன் அதிமுகவில் இணைவதாக தெரிவித்துள்ள இசக்கி சுப்பையா, தொண்டர்களின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பேசிய அவர், “48 நாட்கள் மட்டுமே அமைச்சராக இருந்தேன் என என்னை டிடிவி தினகரன் கிண்டல் செய்தார். இது ஒரு தலைவருக்கு அழகல்ல; நானும் என் தொண்டர்களும் தாய் கழகத்திற்கே செல்கிறோம். என்னால்தான் இசக்கி சுப்பையா அடையாளம் காட்டப்பட்டார் என்று டிடிவி தினகரன் சொல்கிறார். ஆனால் தினகரனே தொண்டர்களால் அடையாளம் காணப்பட்டவர்தான்” எனத் தெரிவித்தார்.
அமமுகவின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், பாப்புலர் முத்தையா, மைக்கேல் ராயப்பன் ஆகியோர் ஏற்கெனவே அக்கட்சியிலிருந்து விலகிய நிலையில் தற்போது இசக்கி சுப்பையாவும் விலகியிருப்பது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.