தினகரனுக்கு அவகாசம் தர தேர்தல் ஆணையம் மறுப்பு
இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கோரியிருந்த கூடுதல் கால அவகாசத்தை அளிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தினகரன் தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதற்காக பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களையும் தாக்கல் செய்தனர். அக்டோபர் 31ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில், செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தரப்பினா் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்கள் மற்றும் கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.
இதனிடையே தேர்தல் ஆணையம் கேட்ட கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இரட்டை இலை சின்னம் தொடர்பாக அக்டோபர் 6ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்ற தினகரன் கோரிக்கையை தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துவிட்டது. இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி அக்டோபர் 6-ம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.