இடம் மாறுகிறதா செம்மொழி தமிழாய்வு நிறுவனம்?: முதல்வர் விளக்கம்
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் இடமாற்றம் செய்யப்படுவதை நிறுத்துமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதுபற்றிய தகவல் தமக்குத் தெரியாது என்றார். தகவல் தெரியவந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் உறுதியளித்தார்.
மேலும், “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்காக பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கான கட்டுமானப்பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி நிறுவனத்தை இணைப்பது பற்றி தகவல் கிடைக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கோ, எனக்கோ முறையாக தகவல் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதல்வர் கூறினார்.