பிறந்தநாள் கொண்டாடிவிட்டு உறங்கச்சென்ற டி.எஸ்.பி மாரடைப்பால் மரணம்... தருமபுரியில் சோகம்
தருமபுரி டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் மரணம்- நேற்றிரவு பிறந்த நாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் இறந்ததால், காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் தருமபுரி உட்கோட்டத்தில், காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார் (58), இவர், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சீலிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். காவல்துறையில் 1987ஆம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த இவர் இன்ஸ்பெக்டராக தருமபுரி, சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி டி.எஸ்.பி யாக பதவி உயர்வு பெற்று தருமபுரி, பென்னாகரம் உட்கோட்டத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தருமபுரி உட்கோட்டத்தில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார். நேற்று அவருடைய 57 வது வயது முடிந்து 58 வயது பிறந்த நாள். ஆனால் நேற்று காலை முதல் பிற்பகல் வரை அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்ட அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வந்தார். பிறகு வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு கிளம்பியுள்ளார்.
அப்போது பிறந்த நாள் என்பதால், தருமபுரி நகர காவல் நிலைய காவலர்கள் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். தொடர்ந்து இரவு உறங்கியவர் இன்று காலை 7 மணிவரை எழுந்திருக்க வில்லை. இதைத்தொடர்ந்து காவல் துறையினர் சென்று வீட்டில் பார்த்த போது, டிஎஸ்பி ராஜ்குமார் உயிரிழந்து இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரது உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கு கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவருக்கு செல்வநிசாந்த் என்ற மகனும், நிவேதா என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், மகளுக்கு திருமணம் முடிந்தது. கடந்த 33 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்த டிஎஸ்பி ராஜ்குமார், தலைக்கவசம் அணியவதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, நீதிமன்ற வளாகத்திற்கு ஒருநாள் இன்ப சுற்றுலா அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து உயிரிழந்த டிஎஸ்பி உடலுக்கு தருமபுரி எஸ்பி சி.பிரவேஷ்குமார் மற்றும் காவல் துறையினர் அஞ்சலி செலுத்தினர்.
பிறந்த நாள் கேக் வெட்டிய சிலமணி நேரத்திலேயே மாரடைப்பால் டி.எஸ்.பிஉயிரிழந்தது, தருமபுரி காவல் துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.